####அறிவோம்####
 
  கண்ணன் பாட்டு       16. கண்ணம்மா என் காதலி - 1.      (காட்சி வியப்பு)       செஞ்சுருட்டி - ஏகதாளம்       ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்      சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!    சூரிய சந்திர ரோ?    வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!    வானக் கருமை கொல்லோ?    பட்டுக் கருநீலப் - புடவை    பதித்த நல் வயிரம்    நட்ட நடு நிசியில் - தெரியும்    நக்ஷத் திரங்க ளடீ! ... 1      சோலை மல ரொளியோ - உனது    சுந்தரப் புன்னகை தான்    நீலக் கடலலையே - உனது    நெஞ்சி லலைக ளடீ!    கோலக் குயி லோசை - உனது    குரலி னிமை யடீ!    வாலைக் குமரி யடீ, - கண்ணம்மா!    மருவக் காதல் கொண்டேன். ... 2      சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!    சாத்திர மேதுக் கடீ!    ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!    சாத்திர முண்டோ டீ!    மூத்தவர் சம்மதியில் - வதுவை    முறைகள் பின்பு செய்வோம்;    காத்திருப் பேனோ டீ? - இதுபார்,    கன்னத்து முத்த மொன்று! ... 3